Saturday 26 September 2015

பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு



சித்தார்த்தன் ஒரு மரணத்தை முதன்முதலாகப் பார்த்த பின்னர்தான் ஆன்மீகத் தேடல் ஏற்பட்டு புத்தரானான். மரணத்தைப்பற்றி எப்போது ஒருவர் சிந்திக்க துவங்குகிறாரோ அப்போதுதான் ஆன்மீகத் தேடல் உண்டாகிறது. மரணம் குறித்து பல்வேறு தத்துவங்களும் தகவல்களும் இதுவரை நீங்கள் அறிந்திருந்தாலும் சத்குரு இங்கே மரணம் பற்றி பேசுவது மரணத்தை புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறது. தொடர்ந்து படியுங்கள்! சத்குரு: மரணம் என்பது என்ன? உங்கள் அனுபவத்தில் இல்லாத எதையும் நீங்கள் நம்பவேண்டாம் என்று நான் உங்களை வலியுறுத்தி வந்திருக்கிறேன். நீங்கள் கேள்விப்பட்ட விஷயத்தில் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களுக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது, அவ்வளவுதான். யாரோ உங்களுக்கு ஒரு கதை சொன்னார்கள், அது உண்மையா உண்மையில்லையா என்று உங்களுக்குத் தெரியாது. எனவே நான் கூட ஏதாவது சொன்னாலும், அதை நீங்கள் நம்பவேண்டாம். அதேநேரத்தில் அதை நம்பாமலும் இருக்க வேண்டாம். யாரோ ஒருவர் இப்போது உங்கள் அனைவர் முன்னிலையிலும் உட்கார்ந்து மிகவும் முட்டாள்தனமாக ஒன்றைப் பேசுகிறார். சரி, இது என்னவென்று பார்ப்போம் என்னும் ஒரு திறந்த மனதுடன் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் உண்மைக்கான சாத்தியக்கூறு எப்போதும் உயிருடன் இருக்கும். உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றை நம்பினாலும் அந்த சாத்தியத்தை அழித்து விடுவீர்கள் அல்லது நம்பாவிட்டாலும் அழித்துவிடுவீர்கள். நீங்கள் எப்போதாவது இறந்திருக்கிறீர்களா? இல்லை, சரி, இறந்த மனிதனையாவது பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் எப்போதாவது இறந்திருக்கிறீர்களா? இல்லை, சரி, இறந்த மனிதனையாவது பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் இறந்த உடலைப் பார்த்திருக்கலாம். ஆனால் இறந்த மனிதனைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லை. நீங்கள் இறந்த மனிதனைப் பார்த்ததில்லை. உங்கள் அனுபவத்திலும் அது இல்லை. நீங்கள் பார்க்கவும் இல்லை. அல்லது இறந்த ஒரு மனிதன் எழுந்து வந்து, ‘நான் இப்படி இறந்தேன். அப்படி இறந்தேன்’ என்று சொன்னதும் இல்லை. நீங்களும் இறக்கவில்லை, இறந்த மனிதனையும் பார்த்ததில்லை. எனவே இறக்கப் போகிறீர்கள் என்னும் கருத்தை எப்படி உருவாக்கிக் கொண்டீர்கள்? இறப்பு என்பது ஒரு கட்டுக்கதை. ஏராளமானவர்கள் இதைப்பற்றி பேசி உங்களை நம்ப வைத்து விட்டார்கள். இறப்பு என்று எதுவும் கிடையாது. உயிர், உயிர், உயிர் மட்டுமே இருக்கிறது. ஒரு பரிமாணத்திலிருந்து இன்னொரு பரிமாணத்திற்கும், இன்னொரு பரிமாணத்திலிருந்து மற்றோர் பரிமாணத்திற்கும் நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, உடல் மிகவும் தளர்ந்து விட்டாலும் அல்லது ஏதாவது காரணத்தால் முறிந்துவிட்டாலும், அல்லது விபத்தில் சிக்கிக்கொண்டாலும், அல்லது குடித்துவிட்டு உங்கள் கல்லீரலை அழித்துக் கொண்டாலும், அல்லது காதல் தோல்வியால் இதயம் முறிந்து போனாலும் அல்லது மிகவும் வயதாகிவிட்டதால் உடல் தளர்ந்துவிட்டாலும் உயிரை தக்கவைத்துக் கொள்ள இந்த உடலால் முடியாது போனால், உயிர் வேறு ஒரு பரிமாணத்திற்கு நகர்ந்தாக வேண்டும். அதனால்தான் இன்னொரு பரிமாணத்திற்கு உயிர் நகர்ந்து போகிறது. உயிருக்கு என்ன நடக்கிறது? எனவே யாராவது இறந்துவிட்டால் அவர் இனி நம்முடன் இல்லை என்றுதான் நீங்கள் சொல்கிறீர்கள். அவர் இனி இல்லவே இல்லை, உண்மையாகவே அவர் இனி இல்லை என்று நீங்கள் சொல்லவில்லை. அவர், இனி உங்களுடன் நீங்கள் அவரை தெரிந்திருக்கும் விதமாக இருக்கப் போவதில்லை. ஒருவருடைய உடல் ஏதோ ஒரு காரணத்தால் மேற்கொண்டு வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகும்போது, அவர் அந்த உடலைவிட்டுப் போக நேரிடுகிறது. இது நடக்கும்போது அந்த உயிருக்கு என்ன நேரிடுகிறது? பொருள்தன்மையிலான உடலும், விழிப்புணர்வான மனமும் போய்விடுகிறது. மனதின் பகுத்துப்பார்க்கக்கூடிய அம்சம் போய்விடுகிறது. ஆனால் மனதின் தன்மை போகவில்லை. அதாவது அவர் இன்னமும் மனதின் தன்மைகளைக் கொண்டிருக்கிறார், ஆனால் பகுத்துப்பார்க்க முடியாது. உங்கள் தந்தை அல்லது உங்கள் தாயார், உங்கள் கணவன், மனைவி, குழந்தை, இனிய நண்பர் இப்படி யார் இறந்தாலும், அவர் உடலை விட்டு நீங்கிய வினாடியே அவருக்கும் உங்களுக்குமான தொடர்பு முடிந்துவிட்டது. ஏனெனில் அவர் உங்களைப்பற்றி அறிந்திருப்பதெல்லாம் பொருள்தன்மையிலானது, இல்லையா? பொருள்தன்மை என்னும்போது உடல்மட்டுமல்ல, மனம், உணர்ச்சி ஆகியவையும்தான். அவரைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பதும், உங்களைப் பற்றி அவர் அறிந்திருப்பதும், பொருள்தன்மையிலான உடல் அல்லது மனம் அல்லது உணர்ச்சி குறித்துத்தான். அவை பொருள்தன்மைக்குள் வருவதுதான். எனவே அவர் பொருள்தன்மையை விட்டுப் போகும்போது அனைத்தும் நீங்கிவிடுகிறது. அப்போது, நான், எனது இறந்த அப்பா என்றெல்லாம் கிடையாது. அவர் இறந்துவிட்டால், அவர் உங்கள் அப்பா கிடையாது. அவரின் கதை முடிந்துவிட்டது. இறக்கும் தருவாயில்… எனவே மனதின் பகுத்துப் பார்க்கும் தன்மை போனவுடன், அவர் தனது இயல்பின் படியே செயல்படுவார். அதனால்தான் இந்தியாவில், ஒரு மனிதர் எந்த சூழ்நிலையில் இறக்கிறார் என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது, எந்த சூழ்நிலையில் அவர் இறக்கவேண்டும் என்பதை நிர்ணயித்து அந்த சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. அவர் எப்படி வாழ்ந்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அவர் இறக்கும் தருணம் வந்தவுடன், ‘ராம், ராம்‘ என்றோ அல்லது வேறெதாவது உச்சரித்தோ மக்கள் தாங்கள் விரும்பும்வண்ணம் அந்த சூழ்நிலையை உருவாக்குகின்றனர். அடிப்படையாக அப்படிச் செய்வதன் பொருள் என்னவென்றால் அவர் இறக்கும்போது பயத்திலோ, பேராசையிலோ, அல்லது இப்படிப்பட்ட காரணங்களாலோ இறக்கக்கூடாது என்பதுதான். ஏனெனில் அவர் இறக்கும் அந்தக் கடைசி தருணத்தில் அவர் மனம் எப்படி இருக்கிறதோ அதுதான் அவருடைய இயல்பாக அவர் இறந்தபின் செயல்படும். விழிப்பிலிருந்து தூக்கத்திற்கு… இன்றிரவு நீங்கள் தூங்கும்போது இதை முயற்சித்துப் பார்க்கலாம். நீங்கள் விழிப்பிலிருந்து தூக்கத்திற்குச் செல்லும் அந்த கடைசி வினாடியை வெறுமனே விழிப்புணர்வுடன் இருந்து பாருங்கள். முடிந்தால் அப்படி முயற்சித்துப் பாருங்கள். அப்போது நீங்கள் விழித்திருப்பீர்கள், உங்கள் விழிப்புணர்வை நழுவவிடும்போதுதான் தூக்கத்திற்குப் போவீர்கள். விழிப்புணர்வுடன் இருக்க முடிந்தால் சில அற்புதங்கள் நடக்கும். அப்படி முடியவில்லையென்றால் தூக்கத்தில் விழும்முன், அந்த கடைசி வினாடிகளில் ஒரு தன்மையுடனாவது இருக்க முயற்சியுங்கள். அந்த நேரங்களில் உங்களுக்குள் அன்பாக இருக்க முடிந்தால், அல்லது மகிழ்ச்சியாக இருக்க முடிந்தால், அதே தன்மை தூக்கத்திலும் தொடர்வதைக் காணமுடியும். விழிப்பிலிருந்து தூக்கத்திற்குச் செல்லும் அந்த கடைசி வினாடிகளில் என்ன தன்மை கொண்டு வருகிறீர்களோ, அந்த குணம் தொடர்ந்து இருக்கும். இதேதான் இறப்பிலும் நடக்கிறது. மரணத்தின் இறுதி தருணங்களில் ஒரு குறிப்பிட்ட குணத்தைக் கொண்டிருந்தால், பிறகு அந்த தன்மை தொடர்ந்து இருக்கும். காசியில் போய் இறப்பது ஏன்? இந்த நம்பிக்கை இருப்பதால்தான், மக்கள் இறக்க விரும்பும்போது மும்பையில் இறக்க விரும்பாமல், காசிக்குச் சென்று இறக்க விரும்புகிறார்கள். இன்னமும் மக்கள் அங்கே செல்கிறார்கள். நிறைய ஞானோதயமடைந்த மனிதர்கள் அங்கிருப்பதால், பல நூற்றாண்டுகளாகவே இலட்சக்கணக்கான மக்கள் அங்கு வந்து காத்திருந்து இறக்கிறார்கள். இறந்துபோவதற்கான மையமாக காசி இருந்துவந்தது. எனவே அங்கு சென்று இறந்தால் தாங்கள் மோட்சம் அடைவதற்கான உதவி கிடைக்கும் என நினைத்தார்கள். சரியான சூழ்நிலையில் இறக்கமுடியும் என நினைத்தார்கள். ஏதாவது காரணத்தால் இந்த உடல் உரிய காலத்திற்கும் முன்னதாகவே உடைந்து விட்டாலும் உயிர்சக்தி மட்டும் இன்னமும் அதிர்வுடன் இருக்கும். விபத்தில் சிக்கி இறந்தாலோ அல்லது அதிகக் குடியின் காரணமாக இறந்தாலோ அல்லது தற்கொலையின் காரணமாக இறந்தாலோ உடல் போய்விடும். ஆனால் உயிர்சக்தி தளர்ந்துவிடாது, அது இன்னமும் அதிர்வுடன் இருக்கும். எனவே அந்த உயிர்சக்தியானது அடுத்த பரிமாணத்திற்குச் செல்ல அதிக காலம் எடுத்துக் கொள்ளும். ஏனெனில் சக்தியானது அதிர்வுநிலையிலிருந்து தளர்வான நிலைக்கு வரவேண்டியுள்ளது. பிராரப்தா கர்மா ‘பிராரப்தா’ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிராரப்தா என்பது ஒரு ஆயுள்காலத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட கர்மா. ஏனெனில் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து கர்மாக்களையும் ஒரு ஆயுள்காலத்திற்கே ஒதுக்கிவிட்டால் உங்களால் தாங்கமுடியாது, உங்களால் வாழமுடியாது. உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கர்மா குடோன் இருக்கிறது. அதை ‘சஞ்சிதா’ என்று குறிப்பிடுகிறோம். அந்த கர்மா குடோனிலிருந்து இந்த ஆயுளுக்காக மட்டும் என்று குறிப்பிட்ட அளவு கர்மா ஒதுக்கப்படுகிறது. ஏனெனில் குடோனிலுள்ள அவ்வளவு கர்மாவையும் உங்களால் கையாள முடியாது. எனவே இந்த ஆயுளில் கையாள்வதெற்கென்று குறிப்பிட்ட அளவு கர்மா ஒதுக்கப்படுகிறது. ஆனால் பொதுவாக, ஒரு பிறவிக்கென ஒதுக்கப்பட்ட கர்மாவைக் கழிப்பதை விடவும் அந்தப் பிறவியில் புதிதாக சேர்த்துக் கொள்வது அதிகமாக இருக்கிறது. இப்படி கர்மா சேர்ந்து, சேர்ந்து, சேர்ந்து கொண்டே போகிறது. இதன் காரணமாக உயிர்சக்தியில் ஒருவித அதிர்வு இருக்கிறது. அந்த அதிர்வு தளர்ந்து போகாவிட்டால் அந்த உயிருக்கு அடுத்த உடம்பு கிடைக்காது. நீங்கள் இந்த உடலை விடவேண்டுமானால் உங்கள் உயிர்சக்தி தளர்வடைய வேண்டும். இன்னொரு உடலைப் பெற வேண்டுமானால் உங்கள் உயிர்சக்தி தளர்வடைய வேண்டும். இதைத்தான் நாம் சமாதி நிலை எனக் குறிப்பிடுகிறோம். இந்த நிலையில் நீங்கள் விழிப்புணர்வுடன் உயிர்சக்தியின் தீவிரத்தை குறைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் உயிர்சக்தி மிகவும் தளர்வடைந்து போகும்போது, விரும்பினால் நீங்கள் இந்த உடலை விட்டுப் போய்விட முடியும், மேலும் இன்னொரு உடலில் நுழைய முடியும். அடுத்த வாரம்… முக்தியை நோக்கி நாம் ஏன் செல்ல வேண்டும்? ஞானோதயம் எப்படி நிகழ்கிறது? ஞானோதயம் நிகழும்போது கர்மா இருக்குமா? ஞானோதயம் அடைந்த பின்னர் உடலை தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதாக அடுத்த வாரப் பகுதி(27-04-2015) அமைகிறது.

Read more at : பிறப்பு – இறப்பு – மறுபிறப்பு… அறியப்படா சூட்சுமங்கள்! http://tamilblog.ishafoundation.org/pirappu-irappu-marupirappu-ariyappada-sootsumangal/

முத்தி



முக்தியை நோக்கி நாம் ஏன் செல்ல வேண்டும்? ஞானோதயம் எப்படி நிகழ்கிறது? ஞானோதயம் நிகழும்போது கர்மா இருக்குமா? ஞானோதயம் அடைந்த பின்னர் உடலை தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதாக இந்தப் பகுதி அமைகிறது. சத்குரு: முக்தி என்றால்… இப்படியே இந்த வாழ்க்கை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது ஏதோ ஒரு தண்டனை போலவோ அல்லது பரிசு போலவோ கிடையாது. இயற்கையின் சுழற்சி இப்படித்தான் இருக்கிறது. உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வு எழுவதன் காரணம், நீங்கள் எதையோ படித்ததால் அல்ல, பிறப்பு, இறப்பு சுழற்சியின் அர்த்தமற்ற தன்மையை நீங்கள் உணர்ந்து கொண்டதால்தான். பிறப்பு, இறப்பு சுழற்சியின் அர்த்தமற்ற தன்மையை உணர்ந்து கொள்ளும்போதுதான் நீங்கள் முக்தி பற்றிப் பேச ஆரம்பிக்கிறீர்கள். ‘முக்தி’ என்றால் பிறப்பு, இறப்பு சுழற்சியிலிருந்து விடுபட விரும்புவது. துன்பப்படுவதால் இந்த விருப்பம் வரவில்லை, பிறப்பு-இறப்பிலிருந்தே விடுபட நினைக்கிறீர்கள். துன்பத்தில் இருக்கும் மக்கள் முக்தியை அடைய முடியாது. நீங்கள் நலமாகத்தான் இருக்கிறீர்கள், ஆனந்தமாகத்தான் இருக்கிறீர்கள், ஆனால் ஆரம்பப்பள்ளியை விட்டு தாண்டிப்போக நினைக்கிறீர்கள். ஆரம்பப்பள்ளி வாழ்க்கை எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் நீங்கள் கல்லூரிக்குப் போக விரும்புவீர்களா மாட்டீர்களா? ஆரம்பப்பள்ளியை அனுபவித்து விட்டோம். இப்போது நீங்கள் அதிலிருந்து நகர விரும்புகிறீர்கள்.
நான்’ என்று நீங்கள் அழைத்துக் கொள்கிற இந்த உயிரை நான் எப்போதும் எதிர்மறைச் சொல்லால்தான் அழைக்கிறேன். அப்போதுதான் உங்கள் கற்பனை கொடிகட்டிப் பறக்காது- வெற்றிடம் அல்லது இருட்டு என அழைப்போம். அதை விடுத்து நான் ஒளி என்றோ அல்லது கடவுள் என்றோ சொன்னால் நீங்கள் கற்பனையில் மிதக்கக்கூடும். முக்தி, ஞானோதயம் என்றால்… உங்களுக்குள் உள்ள வெற்றிடம் ஒரு காற்றுக்குமிழ் போல இருக்கிறது. கர்மா அந்த காற்றுக்குமிழியின் சுவராக இருக்கிறது. கர்மா இல்லாமல் உங்கள் இருப்பே இங்கு இருக்கமுடியாது. கர்மா உங்கள் எதிரியல்ல. கர்மா இருப்பதால்தான் நீங்கள் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கர்மாவும் நீக்கப்பட்டுவிட்டால், நீங்கள் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்க முடியாது. அது ஒரு காற்றுக்குமிழ். நீங்கள் உங்கள் உடலை விட்டு நீங்கினாலும் இந்த காற்றுக்குமிழ் இருக்கிறது. அது தன் அதிர்வை இழந்தவுடன் இயற்கையாகவே அது வேறு உடலை எடுத்துக் கொள்ளும். எனவே இப்போது அந்த காற்றுக்குமிழியை துளையிட விரும்புகிறோம். முக்தி என்பது எதைக் குறிக்கிறது என்றால், உங்களுள் உள்ள குமிழியில் துளையிடுவதன் மூலம், அதிலுள்ள காற்று வெளிவந்து எல்லாவற்றின் பகுதியாக மாற விரும்புவதைத்தான் குறிக்கிறது.
ஞானோதயம் என்பதும் இதைத்தான் குறிக்கிறது. பெரும்பாலானோருக்கு ஞானோதயம் அடையும் நேரமும் உடலை விட்டுச் செல்லும் நேரமும் ஒன்றாக இருக்கிறது. உடலின் அடிப்படை செயல்தன்மையை அறிந்த சிலர் மட்டும், உடலின் தந்திரங்கள் அறிந்த சிலர் மட்டும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உடலை தக்கவைத்துக் கொள்கிறார்கள். மற்றபடி ஞானோதயம் அடையும் நேரமும் உடலை விட்டு செல்லும் நேரமும் ஒன்றாக இருக்கிறது. உயிர்சக்தியின் தீவிரம்… உயிர்சக்தி அதிகத் தீவிரத்துடன் இருந்தாலும் நீங்கள் உடலைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது. உயிர்சக்தி தளர்வடைந்து போனாலும் நீங்கள் உடலைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது. உயிர்சக்தி ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் இருக்கும்போதுதான் நீங்கள் உடலைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். அதன் தீவிரத்தை ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி உயர்த்தினீர்கள் என்றால் நீங்கள் உடலைவிட்டுப் போய்விட நேரும். எனவே உலகில் இரண்டு வகையான யோகாவைத்தான் நீங்கள் பார்க்கமுடியும். ஒரு வகை, விலகிக்கொண்டே செல்வதன் மூலம் கடைசியில் உயிர்சக்தியை தளர்வடையச் செய்து உடலை விட்டு நீங்குவது; மற்றொரு வகை உயிர்சக்தியின் தீவிரத்தை அதிகப்படுத்திக் கொண்டே வருவதன் மூலம் மேற்கொண்டு உடலைத் தாங்கமுடியாமல் உடலைவிட்டு நீங்குவது. எனவே உயிர்சக்தி மிகவும் தீவிரமடைந்தாலும் சரி, மிகவும் தளர்ந்தாலும் சரி, உடல்தன்மை உங்களைப் பிடித்துவைத்திருக்க முடியாது. சமூகத்தில் உயிர்சக்தியை தீவிரமடையச் செய்யும் முறைக்கு மிகுந்த வரவேற்பு இருக்கலாம், ஆனால் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. உங்களைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது உங்கள் உயிர்த்தன்மைக்கு முக்கியமில்லாத விஷயம். அதற்கு சமூகரீதியில் முக்கியத்துவம் இருக்கலாம். ஆனால் உங்களைப்பற்றி இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பதிலோ அல்லது நீங்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதிலோ, உங்கள் இருப்பைப் பொறுத்தவரையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆன்மீகம் என்று சொல்லும்போது உயிர்த்தன்மையளவில் எப்படி வளர்ச்சியடையவது என்று பார்க்கிறீர்கள். சமூக அளவிலோ, உணர்ச்சி ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ எப்படி வளர்ச்சியடைவது என்று பார்ப்பதில்லை. உண்மையில் நீங்கள் வேறெங்கோ போக விரும்புகிறீர்கள், ஏனெனில் உங்கள் உணர்ச்சி, உங்கள் சமூகம், உங்கள் உளவியல் எல்லாம் உங்களது கற்பனைதான். இல்லையா? வேண்டுமானால் அவை சில நேரங்களில் இன்பம்தரும் கற்பனையாக இருக்கலாம், ஆனாலும் அவை கற்பனைதான், இல்லையா? உயிர்சக்தி மிகவும் தீவிரமடைந்தாலும் சரி, மிகவும் தளர்ந்தாலும் சரி, உடல்தன்மை உங்களைப் பிடித்துவைத்திருக்க முடியாது. ஒரு உயிரின் உடல்தன்மையைக் கடந்த வளர்ச்சியானது, அவர் இந்த உலகில் என்னவாக இருக்கிறார், அவர் தன்னைப்பற்றி என்ன எண்ணம் வைத்திருக்கிறார், மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமைவதில்லை. அவர் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறார், எந்த அளவு பொருள்தன்மையைக் கடந்த நிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தே அமைகிறது. எனவே ஒருவர் இந்த எல்லா செயல்முறைகளிலிருந்தும் உண்மையாகவே விடுதலை பெற விரும்பினால், அந்த நோக்கத்தின் அருகில் செல்ல பல வழிகள் உள்ளன. ஆனால் காற்றுக் குமிழியை உடைத்துக் கொண்டால் விழிப்புணர்வுடன் செயல்பட முடியாது, ஏனெனில் பகுத்துப்பார்க்கும் தன்மை உங்களிடமிருந்து நீக்கப்பட்டு விடுகிறது. மனிதப் பிறவியின் முக்கியத்துவம்… இதனால்தான் மனிதப்பிறவி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மனிதப்பிறவியில் மட்டும்தான் பகுத்துப் பார்க்கும் தன்மையை பயன்படுத்தி விழிப்புணர்வுடன் செயல்பட முடியும். இந்த நிமிடம் வரை நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் இப்போது இந்த வினாடி நீங்கள் விழிப்புணர்வுடன் செயலாற்ற முடியும், இல்லையா? இதுவரை நீங்கள் மிகவும் மோசமான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம், அது ஒரு பொருட்டல்ல. இந்த வினாடி நீங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட முடியும். அந்த சுதந்திரமும், பகுத்துப் பார்க்கும் தன்மையும் எப்போதும் உங்களிடம் இருக்கிறது. விழிப்புணர்வு ஒரு தீவிரத்திற்கு வந்து விட்டாலோ, அல்லது தீவிரம் குறைந்து விட்டாலோ உடலில் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் ஆகிறீர்கள். அந்த நிலையில், குமிழியை முழுவதுமாக உடைத்துவிடக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. குமிழியை உடைத்த பிறகும் உடலில் தங்கியிருக்க வேண்டுமானால் அதற்கு தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. எல்லாத் தந்திரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அல்லது உடலைத் தக்க வைத்துக் கொள்ள நாமாகவே சில கர்மாக்களைச் செய்ய வேண்டும். இதற்கு மக்கள் பல செயல்களைச் செய்கிறார்கள். நான் என்னைப் பற்றி பேச விரும்பவில்லை. ஏனெனில் பல செயல்கள் எனக்குள் நடந்து கொண்டிருக்கின்றன. ராமகிருஷ்ணரின் உணவுப் பற்று… உதாரணத்திற்கு ராமகிருஷ்ண பரமஹம்சரை எடுத்துக் கொள்வோம். அவர் வாழ்ந்த காலத்திலேயே மக்கள் அவரை ஒரு கடவுளாகப் பார்த்தார்கள். ஆனால் ராமகிருஷ்ணர் உண்ணும் விஷயத்தில் வெறி பிடித்தது போலிருந்தார். இது உங்களுக்கு தெரியுமா? அவர் உணவு விஷயத்தில் பைத்தியமாக இருந்தார். சீடர்களுடன் பேசிக் கொண்டிருப்பார், திடீரென அவர்களை காத்திருக்கச் சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்று, சாரதாவைப் பார்த்து “இன்று என்ன சமைத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்பார். உணவு விஷத்தில் அவ்வளவு பைத்தியமாக இருந்தார். சாரதா, ராமகிருஷ்ணரைப் பார்த்து “நாங்கள் உங்களை கடவுள் போல பார்க்கிறோம், ஆனால் நீங்கள் உணவின் மீது இவ்வளவு பைத்தியமாக இருக்கிறீர்களே, என்ன இது?” என்று கேட்பார். “அது சரி, இன்று என்ன சமையல்?” என்று ராமகிருஷ்ணர் திருப்பிக் கேட்பார். ஒரு நாள் சாரதாவிற்கு இது மிகவும் அவமானமாக இருந்ததால், கோபத்துடன் ராமகிருஷ்ணரைப் பார்த்து திட்டிவிட்டார். அதற்கு ராமகிருஷ்ணர், “ஏதாவது ஒரு நாள் நீ தாளியை கொண்டுவரும் போது (தாளி என்பது உணவுகள் பரிமாறப்பட்ட தட்டு), அன்று உணவில் அக்கறை காட்டாமல் இருந்தால் அன்றிலிருந்து மூன்று நாட்கள் மட்டுமே நான் இருப்பேன் என்பதைத் தெரிந்துகொள்” என்று சொன்னார். அவர் அப்படி சொன்ன ஆறு வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் சாரதா உணவெடுத்துச் சென்றபோது, அவர் முகம் திரும்பிக் கொண்டார். ராமகிருஷ்ணர் முன்பு சொன்னது, திடீரென சாரதாவின் நினைவிற்கு வர அவர் கதறி அழுதார். ராமகிருஷ்ணர் சொன்னார், “இப்போது அழுவதில் பயனில்லை, காலம் வந்துவிட்டது” என்று. ராமகிருஷ்ணர் உணவின் மீது ஆசை வைத்து விழிப்புணர்வுடன் கர்மா உருவாக்கிக் கொண்டார். உடலைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு நாளைக்கு 10 தடவையாவது உணவின் மீது ஆசையை உருவாக்கிக் கொள்வார். மற்றபடி சாதாரணமாக அமர்ந்திருந்தாலே உடலை விட்டு விடுவார். அவர் தனக்கென சில வேலைகளை வைத்திருந்ததால் மேலும் சில காலத்திற்கு உடலில் இருக்க தீர்மானித்திருந்தார். இது போல வெவ்வேறு யோகிகள் பல வழிகளைக் கையாண்டார்கள். சில எளிமையானவை, சில சிக்கலானவை. குமிழ் ஒருமுறை வெடித்து, பிறகும் விழிப்புணர்வுடன் நீங்கள் உடலைக் கொண்டிருந்தால், பல வழிகளில், இருப்பு ரீதியாக உங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. 

Thursday 10 October 2013

ரஷ்ய நாட்டில் தமிழுக்கு ஓரிடம்



மொழிப் பற்றால் இதைப் பகிரவில்லை.
மொழிப் பழிப்பாளர்க்காக பகிர்கிறேன்.
நமது தாய் மொழியின் பெருமையை வௌி நாட்டவர்கள் மதிககிறார்கள் ஆனால் தமிழர்களான நம்மில் பலர் தமிழில் எழுதுவதையோ பேசுவதையோ கேவலமாக நினைக்கிறார்கள் நமது தாய் மொழி தமிழ் உலகிலே ஆதி மொழி . நாம் தமிழர்களாக இருப்பதை நினைத்து பெருமைப்படவேண்டும். நண்பர்களே நம்மால் முடிந்தவரை நம் தாய் மொழி தமிழின் பெருமைகளை சொல்லுவோம். 



துன்பத்தில் அழை; இன்பத்தில்
 நன்றி சொல்;

அவரவர் பக்குவம் தந்த பாடம்.